நிமிடத்திற்கு நான்கு முறை
என் பேர் சொல்லி அழைத்து,
நேரம் கேட்டதால்...
புதிதாய் வாங்கிய உன் பெயர் போட்ட கடிகாரத்தை
‘இருக்கட்டும் இது!’ என்று ஒளித்து வைத்தேன்.
உனக்காக;
நீ பசியாய் வந்த பொழுது
தண்ணீர்க்குவளையும் உப்புத்தூவியும்
என் பேர் சொல்லி அழைத்து,
வேண்டும் என்றதால்...
புதிதாய் வாங்கிய உன் பெயர் போட்ட இரண்டையும்
‘காணோமே அது!’ என்று ஒளித்து வைத்தேன்.
உனக்காக;
நீ பிரச்சனையோடு வந்த பொழுது
முழுதாய் ஒரு நிமிடம் பார்ப்பாய்
என் பேர் சொல்லி அழைத்து,
என்முகம் என்பதனால்...
புதிதாய் வந்த இழப்பையும் கண்ணீரையும்
‘சரி போகட்டும் அது!’ என்று ஒளித்து வைத்தேன்.
உனக்காக;
நீ (உன்) தாய் தந்தையோடு வந்த பொழுது
பேச்சுவார்த்தை முற்றிய பிறகும்
என் பேர் சொல்லி அழைத்து,
என்னைத் திட்டாமல் விட்டதனால்...
புதிது புதிதாய், உன் பெயர் போட்டு வந்த சண்டைகளையும்
‘சாவி போட்டே இருக்கட்டும்’ என்று ஒளித்து வைத்தேன்.
உனக்காக;
இப்படி ஒளித்துவைத்து ஒளித்துவைத்து
உன்னைக் காதலித்ததால் தான்
அப்படி என்ன செய்துவிட்டாய் ‘எனக்காக?’, என்று
என் பேர் சொல்லி அழைத்து...
புதிதாய் ஒருவலி தந்தாயே இன்று;
‘அதுவும் இருக்கட்டும்’ என்று ஒளித்து வைக்கவா?
உனக்காக.
ஒலிக்கும்... ...
